உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்…
இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை, இன்சுலினை நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கபடுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும். 2ம் வகை வயதான பின் வரும் நோய். இதை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
முதலாம் வகை, சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் பீட்டா செல்கள் அழிக்கப்படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும்,
இன்னும் சிலருக்கு இன்சுலினை வீரியம் உள்ளதாக வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளம் வயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்தவித தடுப்பும் உபயோகப்படாது. நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் இருந்து 10% பேர் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பாங்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருத்தல், அதிக உடல் இயக்கம் இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.
மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறை பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.
நீரிழிவு நோய்க்கான மருந்து
முதலாம் வகை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் வகை நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடையை குறைப்பதோடு சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொழுப்புச் சத்தை குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% பேர் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% பேர் மாத்திரைகளும் 17% பேர் இரண்டும் உபயோகிக்கிறார்கள். நீரிழிவு நோய் முதலாம் நிலையில் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால், அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.
இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல, இவர்களுக்கு முன் இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்கப்படும் போது சர்க்கரை அளவு 100,120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.
அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 4.1 கோடிக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முதல் நிலை பாதிப்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. 2005ம் ஆண்டு மட்டும் 20 வயதுக்கும் மேலானவர்களில் 15 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதய நோய், பக்கவாதம்
நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வரக்கூடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இதய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இதய நோய், பக்கவாதம் வந்தபின் 65% பேர் இறக்கிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்களில் 75% பேருக்கு 130/90க்கு மேல் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருந்து உட்கொள்கிறார்கள்.
20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோயாளிகள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டுக்கு 24,000 பேர் புதிதாக கண் பார்வை இழப்பதாக சொல்லப்படுகிறது. சிறுநீரக கோளாறு வரவும் நீரிழிவு நோய் முதல் காரணம் ஆகிறது. ஆண்டுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். 2002ம் ஆண்டில் நீரிழிவு நோய் உள்ளவர்களில் 1,50,000க்கும் அதிகமானோர் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்றுப்போதல், உணவு செரிக்கும் சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு கால்கள் நீக்கபட வேண்டிய நிலைகூட வருகிறது. பற்களும் அதிகளவு பாதிக்கப்படுகிறது. பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம்.
”பிளாக் டீ” குடித்தால் நோய் கட்டுப்படுமாம்
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுகூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.
மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது.
“பிளாக் டீ‘ யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்கு. அதற்காக எந்த நியாய தர்மங்களும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நியாயம் சொந்த நாட்டு இயற்கை வளங்களின் மேல் கைவைக்கக் கூடாது. மற்ற வளரும் நாடுகளின் வளங்களை இஷ்டத்துக்கு சூறையாடலாம். உலகம் முழுக்க இருக்கும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க பாம் ஆயில் அவசியம். லிப்ஸ்டிக் போன்ற மேக்கப் பொருட்களில் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிளாஸ்டிக் சாஷேக்களில் வெளிப்புற வெப்பத்தைத் தாங்குவதற்கும், க்ரீம்களின் மென்மையான மேற்பரப்புக்காவும் பாம் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுக்க மக்களின் மேக்கப் மோகம் பல மடங்கு அதிகரிக்க, (அந்த மோகத்தைத் தூண்டுவதும் இதே பன்னாட்டு நிறுவனங்கள்தான்!) பாம் ஆயிலின் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்தது. ‘தென்னையை வெச்சவன் தின்னுட்டு செத்தான்… பனையை வெச்சவன் பார்த்துட்டு செத்தான்’ என்பது, இரண்டு மரங்களும் வளர்வதற்கு ஆகும் காலத்தைச் சொல்லும் அட்டகாசப் பழமொழி. வளர்வதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் பனைமரம், கொடுப்பது என்னவோ கொஞ்சூண்டு எண்ணெய்தான். ‘அது எப்போ ஆயில் தந்து… நாம எப்போ காசு பார்த்து’ என்கிற அவசரம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு. என்ன செய்வது என யோசித்தவர்கள் எடுத்த குரூரமான முடிவுதான், காடுகளை அழித்து பனைமரங்களை நடுவது. எங்கே காட்டை அழிப்பது? இந்தியா, ஜெர்மன் போன்ற இரண்டாம் நிலை நாடுகள் என்றால், எதிர்ப்பு இருக்கும். வறுமையும் கல்வியறிவும் குறைவான மூன்றாம் நிலை நாடுகள் என்றால் எந்த எதிர்ப்பும் இருக்காதே!
இந்தோனேஷியா, மலேசியா, சுமத்ரா, தாய்லாந்து போன்ற குட்டி நாடுகளை இந்தப் பன்னாட்டு கம்பெனிகள் குறிவைத்தன. சிறு வயதில் புவியியல் வகுப்பில் டிராப்பிக்கல் ரெயின் ஃபாரஸ்ட்(Tropical rain forest) எனப் படித்திருப்போமே, இந்தத் தீவுகளில் அப்படிப்பட்ட காடுகள் நிறையவே உண்டு. இந்தக் காடுகளில் மழையும் அதிகமாக இருக்கும்; அதே அளவு வெயிலும் இருக்கும். வெப்பமும் குளிரும் கலந்திருப்பதால் நிறையப் புற்கள் முளைக்கும். எனவே மான்கள் இருக்கும். அதை வேட்டையாட புலிகள் இருக்கும். ஒவ்வொரு காட்டுக்கும் ஒரு ஸ்பெஷல் உயிரினம் இருப்பதைப்போல, இங்கே உராங்உட்டான் குரங்குகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் காட்டை அழித்தால் வளர்வதற்கு குறைவான காலம் எடுத்துக்கொள்ளும், அதே சமயம் அதிக எண்ணெய் தரும் பனைமரங்களை நடலாம். அப்புறம் என்ன? காசு, பணம், துட்டு, மணி, மணி! அரசாங்க அதிகாரிகளுடன் நேரடியாக டீல் போட்டு, ‘உங்கள் நாட்டில் ஒரு பகுதி காட்டை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அதில் விதவிதமான மரங்களுக்குப் பதில் பனைமரங்கள் நடப்போகிறோம்’ என ஒப்புதல் வாங்கிவிட்டார்கள். எப்போ மரத்தை வெட்டி, எப்போ புது பனைமரங்கள் நட்டு, எப்போ காசு பார்ப்பது? அதனால் காடுகளை அழிக்க, சிம்பிளாக அவற்றுக்குத் தீவைத்துவிட்டார்கள். எந்தப் பக்கமும் போக முடியாமல் புலிகள், சுமத்ரன் நீர்யானைகள், ஆசிய யானைகள் போன்றவை தீயில் கருகி அலறிச் செத்தன. பறவைகள் கூச்சலோடு இடம்பெயர்ந்தன. இதுவரை 400 சுமத்ரன் புலிகளைக் காணவில்லை. இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. ஒரு பகுதியை எரித்து, பனை நடவு முடிந்தவுடன் அடுத்த பகுதி. இப்போது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கே கரும் புகையைக் கக்கியபடி, மரண ஓலத்துடன் காடு எரிந்துகொண்டிருக்கும்.
உலகில் ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட எட்டு கால்பந்து மைதானங்கள் அளவுக்கான காடுகள், தினமும் அழிக்கப்பட்டுவருகின்றன என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு கவலையோடு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எரிக்கப்படும் காடுகளால் உராங்உட்டான் குரங்குகளின் எண்ணிக்கை சரசரவென சரிபாதியாகக் குறைந்துவிட்டது. ‘உராங்உட்டான்’ என்றால் காடுகளின் மனிதன் என அர்த்தம். ஏனென்றால், இதன் 97 சதவிகித செயல்பாடுகள் அப்படியே மனிதனைப்போலவே இருக்கும். பாலூட்டுவதில் இருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வது வரை அப்படியே மனிதனைப்போலவே வாழும். குரங்கு வகையிலேயே அதிக புத்திசாலி. International union for the conservation of Nature and natural resources என்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் ஒவ்வொரு வருடமும் ‘ரெட் புக்’ என்ற பட்டியலை வெளியிடுகின்றனர். அதில் ’55 ஆயிரம் போர்னியோ உராங்உட்டான் உள்ளன. காடுகளில் தீ வைப்பதால் வருடத்துக்கு 2,000 குரங்குகள் அழிந்துவிடுகின்றன. சுமத்ரன் தீவு உராங்உட்டான் மொத்தமே 6,300-தான் இருக்கின்றன. அது வருடத்துக்கு 1,000 என்ற அளவில் அழிந்துவருகின்றன. இதே வேகத்தில் போனால், இன்னும் 10 ஆண்டுகளில் உரான்உட்டான் குரங்குகளே இருக்காது’ என்கிறது. காடுகள்தானே அழிகின்றன என அலட்சியமாக இருந்துவிட முடியாது. இப்படி வருடம் முழுவதும் எரிக்கப்படும் காடுகளால் 35 மில்லியன் டன் கார்பன் வெளியாகி, கடந்த 10 ஆண்டுகளில் குளோபல் வார்மிங் 20 சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டது. இப்படி ஓர் அழிப்பு வேலை வெளியே தெரியவந்து அதிர்ச்சி அலை ஏற்படுத்த, பல தன்னார்வ நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்துப் போராட ஆரம்பித்திருக்கின்றன.
அதுபோன்ற ஓர் அமைப்புதான் Roundtable on Sustainable Palm Oil (RSPO). ‘இன்றைய தினசரி வாழ்க்கையில் இருந்து பாம் ஆயில் பயன்பாடுகொண்ட பொருட்களை நீக்குவது என்பது ரொம்பவே கஷ்டம். மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் பாம் ஆயிலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம், காடுகளை அழித்தே எடுக்கப்படுகிறது. இதில் மக்களைக் குறைசொல்வதில் அர்த்தம் இல்லை. ‘காடுகளை அழித்து பனைமரங்களை நடுவதற்குப் பதிலாக, இயல்பாக பனை மரங்கள் வளர்க்க முடிந்த இடங்களில் வளர்த்து அதைப் பயன்படுத்துங்கள்’ என, பன்னாட்டு நிறுவனங்களை வலியுறுத்துகிறோம். இதில் மக்கள் தங்கள் பங்காக கடையில் வாங்கும் பொருட்களில் எங்கள் முத்திரையான Certified Sustainable Palm Oil(CSPO) அல்லது green palm முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள். அப்படி நாங்கள் முத்திரை கொடுத்திருக்கும் பொருட்கள், காடுகளை அழிக்காமல் பாம் ஆயில் எடுத்துப் பயன்படுத்தியது என அர்த்தம். அப்படி எந்த முத்திரையும் இல்லையென்றால், அதன் தயாரிப்பாளரிடம் நீங்கள் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. காடுகளை அழிக்காமல் நல்ல முறையில் உருவாக்கப்படும் பாம் ஆயிலினால் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியல், இணையதளத்திலும் கிடைக்கிறது. நமது பங்காக அதை வாங்க ஆரம்பித்தாலே மற்ற கம்பெனிகள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்’ என்கிறார்கள்.
அடுத்த முறை லிப்ஸ்டிக் பூசும்போது லேசாகச் சுவைத்துப் பாருங்கள். உராங்உட்டான் குரங்கின் ரத்தப் பிசுபிசுப்பை உணரலாம்!