கண்ணீரும் கதை சொல்லும் தனுஸ்கோடி

தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம். தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் இன்று (டிசம்பர் 23).

1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி, அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது. மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர். அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது. இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது.

 

 

ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம். அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது. பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் போய்க் கொண்டிருந்தது. அதற்கு அப்போது போட் மெயில் என்று பெயர். தனுஷ்கோடி வரை செல்லும் இந்த ரயிலில் தமிழ்நாட்டில் பிறபகுதிகளில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை செல்வார்களாம். அப்போதெல்லாம் இலங்கைக்கும், நமக்கும் நல்லுறவும், பயணப் போக்குவரத்தும் இருந்து வந்தது. எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர். அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

 

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது – கடந்த காலத்தில் தாங்கள் ‘தடம் புரண்ட’ கதையை சொல்லியபடி. ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன ‘டைரி’யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாத தனுஸ்கோடி பள்ளி

 

 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும், இதமானக் காற்றும். தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இவையெல்லாம் ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் அடையாளமாக இருந்தது. இது எல்லாம் பழையக் கதை.
1964-ம் ஆண்டு டிசம்பர்-24 அன்று தாக்கியப் புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகம் காணாமல் போனது. அன்று தாக்கியப் புயலின் கோரத்திலிருந்து இன்று வரையிலும் இன்னும் மீளவே இல்லை.

இன்றைய தனுஸ்கோடியில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து, குடிநீர் வசதி என்று எந்த அடிப்படை வசதியும் இன்று கிடையாது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும் கடலை மட்டுமே நம்பி 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கற்றது கடலளவு என்று இருந்த தனுஸ்கோடி மீனவர்களின் குழந்தைகளுக்கு 2004ஆம் ஆண்டில்  ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் அனைவருக்கும் கல்வி திட்டதின் மூலம் ஓராசிரியர் பள்ளியை மாவட்ட நிர்வாகம் உருவாக்கித் தந்தது. இன்று அரசு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்திருக்கிறது. வெறுமனே பெயரில் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டிருக்கும் இப்பள்ளியில் நடுநிலைப்பள்ளிக்குரிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததுதான் வேதனை தரக்கூடிய செய்தி.
8ம் வகுப்பு வரையிலும் உள்ள இந்தப் பள்ளியில் 73 மாணவர்கள் படிக்கிறார்கள். 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள். பைபர் பொருட்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் தனுஸ்கோடியின் கடல் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. கட்டிடத்தின் கூரை அடிக்கடி பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிக்கூடத்திற்கு வழங்கப்பட்ட கணினி, தொலைக்காட்சி ஆகியற்றை மின்சாரம் இல்லாதால் இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை. குடிநீர் கிணற்றை தூர் வாராமல் மாசு அடைந்தும், கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் மணல் மூடிக்கிடக்கிறது.
இவ்வாறாக எவ்விதமான அடிப்படை வசதிகளுமே இல்லாமல் மழையிலும், வெயிலிலும், கடூம் கடல் காற்றிலும் பயிலும் மாணவர்களின் சிரமங்களை சில சொற்களில் சொற்களில் அடக்க முடியாது.
தனுஸ்கோடி பள்ளி என்றாலே அலறியடித்துக் கொண்டும் ஆசிரியர்களுக்கு மத்தியில் இப்பள்ளியின் பணிபுரியும் பிரான்சிஸ்மேரி, குருஞானேஸ்வரி, முத்துக்குமார், சசிகுமார் ஆகிய ஆசிரியர்கள் நால்வரும் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை பாராட்டாமல் இருக்க முடியாது.

பள்ளியின் உட்புறத் தோற்றம்

பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் மேரி ”ராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராயர் சத்திரம் வரையிலும் தான் போக்குவரத்து வசதி உள்ளது. அதற்கு மேல் தனுஸ்கோடி வரவேண்டும் என்றால் 3 மணிநேரம்  கடற்கரை ஓரம் நடந்தேதான்  பள்ளிக்கு வரவேண்டும். எனக்கு கூட பழகிப்போச்சி. ஆனால் குருஞானேஸ்வரி ஆசிரியை ஒரு மாற்றுத்திறனாளி தினமும் ராமநாதபுரத்தில் இருந்து வருகின்றார். அதிகாலையில் புறப்பட்டுவரும் அவர் வீடு திரும்பும்போது இருட்டிடும். ஆசிரியர்கள் 4 பேர்களுக்கும் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஸ்கோடி வர போக்குவரத்து வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

தனுஸ்கோடி கிராமத் தலைவர் மாரி ”நண்பன் திரைப்படத்தில் தனுஸ்கோடியில் பள்ளியின் ஆசிரியராக நடிகர் விஜய்  நடித்திருப்பார். தனுஸ்கோடி பள்ளியில் மாணவர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்பத்துடன் கல்வியை விஜய் வழங்குவதாக காட்டியிருப்பார்கள். தனுஸ்கோடி மீனவ மக்கள் அதையெல்லாம் கேட்கவில்லை. பள்ளியை கான்கிரிட் கட்டிடமாகவும், கழிவறையையும், கிணற்றையும் புதுப்பித்தும், மின்சார வசதி என ஒரு பள்ளிக்குரிய அடிப்படை வசதிகளை தான் கேட்கிறோம். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவை கிணற்றில் போட்டக் கல்லாய் கிடக்கிறது ” என்றார் ஆதங்கத்துடன்.
 ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் ”தனுஸ்கோடி பள்ளியிலுள்ள பிரச்சனைகள் பற்றி என் கவனத்திற்கு வந்தது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சூரிய சக்தியில் இருந்து மின்சாரம்  பெற ஏற்பாடு செய்கிறேன். மேலும் தனுஸ்கோடி பள்ளியின் கட்டிட வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனிடம் நேரில் முறையிடுவேன்” என்றார்.
ராமேஸ்வரம் தீவின் கடைகோடியில் இருக்கும் தனுஸ்கோடி பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமேயானால் அவற்றில் இருந்து பல அப்துல் கலாம்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை.

நன்றி தி இந்து

தனுஸ்கோடி அரியப் புகைப்படங்கள்

நன்றி: படங்கள் ரபி 

1964 தனுஸ்கோடி புயலுக்கு முந்தைய அரியப் புகைப்படங்கள்.

 

Leave a comment