பொதுவாக மீன் பிரியர்கள் வஞ்சிரம்,வாவல்,ஷீலா,கொடுவா என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இந்த பட்டியலைத் தாண்டி வேறு மீன்களை வாங்க மாட்டார்கள். இவற்றைவிட விலை குறைவாக, அதே வேளையில் வஞ்சிரம் வாவலுக்கு சுவையில் ஈடு கொடுக்கும் எத்தனையோ மீன் வகைகள் உண்டு. இவற்றைக் குறித்து தெரிவதில்லை என்பதால் எதற்கு ரிஸ்க் என்று பழகிய மீன் லிஸ்ட்டிலேயே நின்றுவிடுகிறார்கள்.
மீன்கள் வாங்கும் போது எல்லா வகை மீன்களும் குழம்பிற்கும் வறுவலுக்கும் உகந்ததாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய சைஸ் மீன்கள் வாங்கும்போது பெரும்பாலும் அந்த மீனின் தலை,வயிறு மற்றும் வால் பகுதிகளை குழம்பிற்கும் மற்றவற்றை வறுக்கவும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வஞ்சிரமோ, வாவலோ வறுவலில் இருக்கும் சுவை குழம்பில் இருக்காது. கிலோவிற்கு 500 ரூபாய் கொடுத்து இம்மாதிரி பெரிய மீன்களை வாங்கும்போது குழம்பிற்கென்று ஒரு ஐம்பது ரூபாய்க்கு காரப்பொடி, நகரை, சுதும்பு, பன்னா போன்ற பொடி மீன்களை வாங்கிவிட வேண்டும். பெரிய மீன்களைவிட பொடி மீன்களே குழம்பிற்கு சுவை கொடுப்பவை. சாப்பிடவும் ருசியாக இருக்கும். இந்த பொடி மீன்கள் சில நேரங்களில் எல்லா மீன்களும் கலந்த மாதிரியும் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது தவற விடக்கூடாது. இப்படி கலந்து கிடைக்கும் மீன்களை பல பொடி என்பார்கள். பல பொடிகளைப் போட்டு வைக்கும் குழம்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது எனலாம்.
பொடி மீன்களில் ஒன்றான காரப்பொடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
காரப்பொடியில் பெரிய சைஸ் மீனே அதிகபட்சமாக 200 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த பெரிய சைஸ் காரப்பொடி கிலோ 150 வரை கிடைக்கும். சிறிய சைஸ் கிலோ 60லிருந்து 100 வரை சைஸிற்கு ஏற்றவாறு கிடைக்கும்.