கற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள்

 

 

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும்Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை

பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம். குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது.

ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948இலேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது.

இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம். ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது கூடவே கற்களும் தான்.

Leave a comment